www.charuonline.com
1. அடியேனின் புத்தம் புதிய சிறுகதை ஒன்று டெஹல்கா சிறப்பிதழில் வெளியாகிறது. குறிப்பிட்ட டெஹல்கா இதழ் ஜனவரி முதல் தேதி கடைகளில் கிடைக்கும். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எழுதிய சிறுகதை. கொஞ்சம் காதல் , ஒரே ஒரு வாக்கியத்தில் மட்டும் செக்ஸ் , போரின் அவலங்கள் எல்லாம் கதையில் உண்டு. நான் - லீனியர் பாணியில் எழுதிய சிறுகதை. வாங்கிப் படியுங்கள். காப்பிரைட் பிரச்சினைகளால்கதையை நமது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய இயலாது.
2. டிசம்பர் 18- ஆம் தேதி எனக்குப் பிறந்த நாள். எப்போதும் அந்த நாளில் கோவிலுக்குப் போவேன். ஆனால் இப்போது எப்போதும் கோவிலுக்குச் செல்லும் ஆளாக மாறி விட்டதால் 18- ஆம் தேதி ஏதாவது ஒரு பாருக்குச் செல்லலாம் என்று திட்டமிட்டிருக்கிறேன். தயவு செய்து என் தொலைபேசி எண்ணுக்கு யாரும் பிறந்த நாள் வாழ்த்தை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டாம். ஏனென்றால் , தீபாவளி அன்று முழுநாளும் வெறும் ஓட்ஸ் கஞ்சியை மட்டுமே குடித்தபடி பட்டினியாய்க் கிடந்தேன். அவந்திகா அந்தச் சமயத்தில் ஒரு இரண்டு வாரகாலம் ஆசிரம வேலையில் மூழ்கியிருந்தாள். வீட்டில் நான் மட்டும் ஸோரோ , பப்புவோடு மாட்டிக் கொண்டேன். சமைக்க மனம் இல்லை. சமைத்துக் கொடுக்க ஆள் இல்லை. வெளியே எந்த உணவு விடுதியும் இல்லை. 150 நண்பர்கள் தீபாவளி வாழ்த்தை குறுஞ்செய்தியாக அனுப்பியிருந்தார்கள். ஆனால் ஒருத்தருக்குக் கூட வடை , முறுக்கு , அதிரசம் , பொருளங்காய் உருண்டை என்று தீபாவளி பட்சணம் அனுப்பத் தோன்றவில்லை. பிறகு நானாகவே லஜ்ஜையை விட்டு ஹமீதிடம் கேட்டேன். மட்டன் பிரியாணி அனுப்பி வைக்கட்டுமா என்று கேட்டார். எனக்கு மட்டன் பிரியாணி பிடிக்கும் என்றாலும் அன்றைய தினம் முறுக்கு , அதிரசம் , சுழியம் போன்ற தீபாவளிக்கே உரிய பிரத்தியேகமான பட்சணங்களையே சாப்பிட விரும்பினேன். ஆனால் மதியமும் ஓட்ஸ் கஞ்சியையே குடித்த போது மட்டன் பிரியாணியையாவது அனுப்பச் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது.
பிறகு நிக்கி போன் செய்து பட்சணம் கொடுத்து அனுப்புகிறேன் என்றான். பட்சணமும் வந்தது. ஆனால் என் துரதிர்ஷ்டம், அவன் வீட்டில் தீபாவளி அன்று அல்வா தான் செய்வார்களாம். ஒரு ஏழெட்டு கிலோ அனுப்பியிருந்தான். எனக்கு அல்வா பிடிக்கும்தான். ஆனால், தீபாவளி நாள் அன்று முறுக்கு, அதிரசம், சுழியம் எதுவும் சாப்பிடாமல் அல்வா சாப்பிடுவதும், ஹமீது வீட்டிலிருந்து பிரியாணி சாப்பிடுவதும் ஒன்றுதான் என்று தோன்றியது.
ஸீரோ டிகிரியில் சொற்களைப் பற்றிய ஒரு கவிதை உண்டு. பசிக்கு சொற்களைத் தின்ன முடியுமா? காமத்தை சொற்களால் தீர்க்க முடியுமா? தனிமையை சொற்களால் கடந்து போக முடியுமா?
டிசம்பர் 12-ஆம் தேதி புத்தக வெளியீட்டு விழா முடிந்த பின், ஒரு ஓட்டலில் மதுபான விருந்து. ஐம்பது பேர் இருப்பார்கள். எல்லோருமே என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள். ஆனால் நான் மட்டும் ஒரு இடத்தில் தனியாக அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பிரியமான ஃப்ரெஞ்ச் ஒய்ன் வரவில்லை. ரிவேரா ஒய்னும் இல்லை. வேறு ஏதோ ஒரு மட்டமான ஒய்ன் என்பதால் பிராந்தி குடித்தேன். எந்த இடம் திரும்பினாலும் ஐந்தாறு பேர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து நின்று, அமர்ந்து, பேசிக் கொண்டு, சிரித்துக் கொண்டு குடித்துக் கொண்டிருந்தார்கள். நான் மட்டும் தனியாக அமர்ந்திருந்தேன். அந்த 50 பேரில் என்னோடு பேச ஒரு ஆள் கூட இல்லை. நானா எழுந்து போய் ‘என்னோடு பேச ஆள் இல்லை; யாராவது வாருங்கள் ’ என்று அழைக்க முடியும்? நர்சிம் பேசியிருப்பார். அவர் எல்லோரையும் உபசரித்துக் கொண்டிருந்தார்.
ரொம்ப நேரம் தனியாகவே அமர்ந்திருந்தேன். பிறகுதான் ஷாஜியும், எஸ்.ராமகிருஷ்ணனும் வந்தார்கள். எஸ்.ரா. எனக்கு எதிரே அமர்ந்து அப்பளத்தை சாப்பிட்டபடி என்னோடு பேசத் துவங்கினார். (அவர் குடிக்க மாட்டார் என்பதால் அப்பளம்). பிறகு சிறிது நேரத்தில் அவரோடும் பேசுவதற்கு ஒரு குழு வந்து விட்டது. ஷாஜி கொஞ்சம் என்னைக் காப்பாற்றினார்.
தமிழகமே கொண்டாடிய ஒரு நடிகை, தான் மிக மிகத் தனிமையை உணர்வதாக ரொம்ப வருஷங்களுக்கு முன் கூறியது ஞாபகம் வந்தது.
வ்வ்வ் .ஆறூஓண்ளீணே .கம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக